அன்று நவராத்திரி. கோவிலுக்குச் சென்றிருந்தேன். பரதனுடன். வழிபாடுகள் எல்லாம் முடிந்தப் பிறகு, வெளியே வரும் போது கோவில் வளாகத்தில், ஒரு யுவதி இரு இளைஞர்களுடன் எதையோ விற்றுக் கொண்டிருந்தாள். பொதுவாக இப்படி விற்கும் பொருட்களில் எதையும் நான் வாங்குவது இல்லை. நடந்து கொண்டே அவர்கள் என்ன விற்கிறார்கள் என்று பார்த்தேன். தீபாவளி வாழ்த்து அட்டைகளை ஒரு இளைஞன் விற்க, காகிதத்தால் செய்யப்பட்ட, சிறு சிறு பூக்களைக் கொண்ட ஒருவகை பூங்கொத்தை அந்த யுவதியும் மற்றொரு இளைஞனும் விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிக்கக் கோரி, அந்தப் பூங்கொத்தை என்னிடம் நீட்டினாள் அந்த யுவதி. புன்னகையுடன் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்து கொண்டே இருந்தேன். நான் வேண்டாம் என்றவுடன், அவளின் முகம் சுனங்கியது. பெருமூச்சு விட்டாள், ஏமாற்றத்துடன். அவளை கடந்து சென்ற பிறகு, காலணி அணிந்து கொண்டிருக்கும் போதுதான் அவளின் முகத்தையும் உடல் மொழியையும் மீண்டும் கண்ணிருத்தினேன். கண் மற்றும் கைகளின் அசைவிலேயே அதை வாங்கிக்கக் கேட்டாள். எனது மனதும் புத்தியும் ஒருங்கே வேலை செய்தன. வாய் பேசயிலாத யுவதி அவள். ஏறக்குறைய 25 வயது இருக்கும்.
காலணி அணிந்தப் பிறகு மீண்டும் அவள் பக்கம் சென்றேன். அவள் முகம் மலர்ந்தது. தீபாவளி வாழ்த்து அட்டைகள் மீது கவனம் போகவில்லை. அவள் வைத்திருந்த அந்தக் காகிதப் பூங்கொத்தைப் பார்த்தேன். கையால் செய்கைக் காட்டி, விலையைச் சொன்னாள். என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. அதற்குள் அருகில் நின்ற அந்த இளைஞன் விலையைச் சொன்னான். அவன் சொன்ன விலை கூட சரியாக விளங்கவில்லை அப்பொழுது. தனது கையில் ஒரு பூங்கொத்தை மட்டுமே அவள் வைத்திருந்தாள். என்ன நிறம் என்று கூட பார்க்காமல் அதை எடுத்துக் கொண்டு, இன்னொரு கொத்தை அந்த இளைஞனிடமிருந்து பெற்றுக்கொண்டேன். 10 வெள்ளியை அவளிடம் கொடுத்து மீதியை வைத்துக் கொள்ளச் சொன்னேன். என்னைப் புரியாமல் பார்த்தாள். அருகில் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் மீண்டும் விலையைக் கூறினான். ஒரு கொத்து 6 வெள்ளி என்று. ஆக இன்னும் இரண்டு வெள்ளியை எடுத்துக் கொடுத்தேன். அவள் முகத்தில் மகிழ்ச்சி. புன்னகை. நன்றியை அவள் மொழியில் மிகவும் அழகாகச் செய்து காட்டினால். இன்றும் அவளின் நன்றியுடன். நன்றி சொல்லி விடைக்கொடுத்தப் பிறகும், மனம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். சிறு தூரம் நடந்த பிறகு, என்னுடைய முகவரி அட்டையை அவளிடம் கொடுக்கலாமா என்ற எண்ணம் எழுந்தது. எங்கே தவறுதலாக நினைத்துக்கொள்வாளோ என்ற மன பதற்றம் வேறு. நின்ற இடத்தில் இருந்தே அவளைப் பார்த்தேன். என்னுடைய இந்தச் செயல்களை அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பெண்மணி கவனித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து புன்னகையும் செய்தார்.
மறுநாள் அதே கோவிலுக்குச் சென்றிருந்தோம். வாசலில் தேடினேன். அவள் அங்கு இல்லை. விஜயதசமி அன்று மீண்டும் அதே கோவில். அதே வாசல்படி. இம்முறை...... அவள் நின்று கொண்டிருந்தாள். உள்ளே செல்லும் போது என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள். அவள் மீது ஏதோ ஓர் உணர்வு. அவள் உடல் குறை மீது நான் காட்டும் பரிதாபம் அல்ல இந்த உணர்வு, ஆனால் பிரியம். அவளின் இனிமையான முகம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. கோவிலில் அமர்ந்துகொண்டிருந்தபோது உள்ளே வந்தாள். அவளுடன் யாரோ ஒரு பெண்மணி. அவளின் அம்மா என்றுதான் நினைக்கிறேன். என்னைப் பார்த்தாள். மீண்டும் புன்னகை. அவள் அம்மா ஏதோ சொல்ல கைகளை அசைத்தவாறு. உணர்ச்சிப் பொங்க பதிலளித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். வாய் மொழி இன்றி, கேள்விகளும் பதில்களும் அவளின் கண்கள் மற்றும் கைகள் அசைவுகளின் மூலமே பேசப்பட்டுக் கொண்டிருந்தன. மீண்டும் என்னைப் பார்த்து கை அசைத்தாள். புன்னகை செய்தாள். இம்முறை என்னுடைய முகவரி அட்டையைக் கொடுத்து விடலாம் என்று எண்ணி, ஒருவரிடம் பேனா வாங்கி, அதில் என் மின்னஞ்சல் முகவரியை எழுதிவைத்திருந்தேன். கொடுக்கலாம் என்று எண்ணம் இருந்தாலும், தயக்கம் தடுத்துநிறுத்தியது. அவளின் குறையைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேனோ என்று தவறுதலாக நினைத்துவிட்டால்?
'எதாவது உதவிகள் தேவைப்பட்டால் எனக்கு மின்னஞ்ஞல் அனுப்பங்கள்' என்று சொல்லி, என் முகவரி அட்டையைக் கொடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அப்படியே கொடுத்தாலும் நான் சொல்வது அவளுக்குப் புரியுமா?. அவளின் அம்மா அவளுடன் கைகளின் அசைவுகளாலேயே பேசிக் கொண்டிருந்தார். ஆக அவளுக்குக் கேட்கும் சக்தியும் இல்லை. நான் பேசினால் அவளுக்குக் கேட்கப்போவதும் இல்லை. இப்படியே நான் குழம்பிக் கொண்டிருக்கையில்....... என்னைப் பார்த்துப் புன்னகை செய்து.. கை அசைத்துச் சென்று விட்டாள்.
அவளிடம் வாங்கிய அந்தக் காகிதப் பூங்கொத்தை என் அறையில் உள்ள மேசையின் அருகிலேயே வைத்திருக்கின்றேன். அதைப் பார்க்கும் போதெல்லாம்..... புன்னகை.
அவளிடம் வாங்கிய அந்தக் காகிதப் பூங்கொத்தை என் அறையில் உள்ள மேசையின் அருகிலேயே வைத்திருக்கின்றேன். அதைப் பார்க்கும் போதெல்லாம்..... புன்னகை.
இவளின் பெயர் என்ன? என்ன வயது? எங்கே பிறந்தாள்? எப்படி வளர்ந்தாள்? என்ன படித்திருப்பாள்? என்ன வேலை செய்கிறாள்? பிறவியிலேயே பேசவும் கேட்கவும் முடியாதா? இவளின் குடும்பம்? யாரை மணக்கப் போகிறாள்?
ஆனால், ஏதோ ஒரு தருத்தணத்தில் நான் அவளை உணர்ந்தேன். அவளும்.









